சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரம் - ஐகோர்ட்டு உத்தரவு

4 months ago 14

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர்? என்ன நடைமுறை பின்பற்றப்படும்? என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் தரப்பிற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதி சுரேஷ்குமார், நீதிபதி சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கால பூஜைகளுக்கு இடையில் கனக சபையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஏதுவாக சாய்வு தல பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், "பக்தர்கள் சுவாமிக்கு எதிரில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு ஓரத்தில் தரிசனம் செய்து கொள்ள அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் திறந்திருக்கும் 11 மணி நேரத்தில், ஆறு கால பூஜைகள் பால் நெய்வேத்தியம் உள்ளிட்ட பிற பூஜைகள் 8 மணி நேரம் நடத்தப்படுவதாகவும், மீதமுள்ள 3 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய ஏதுவாக, ஒரே வழியில் சென்று வருவதை தவிர்த்து கூடுதல் வழியை ஏற்படுத்துவது குறித்து கட்டிடக்கலை வல்லுநர்களுடன் ஆலோசித்து திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் விசாரணையை மார்ச் 6-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் தங்கள் தரப்பு கருத்துகளை மனுவாக தாக்கல் செய்ய அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article