ஆந்திரா: சிங்கப்பூரில் நடிகர் பவன் கல்யாண் மகன் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் காயமடைந்த தனது மகனை காண பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி அன்னா லெஸ்நேவா, ரஷ்ய வெளிநாட்டை சேர்ந்தவர். இவரை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பவன் கல்யாண் கடந்த 2013ம் ஆண்டு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் மகன் சிறுவயது முதலே சிங்கப்பூரில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பள்ளியில் இன்று காலை தீவிபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு கைகளிலும், கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மார்க் சங்கரின் நுரையீரலும் புகையல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிக்கூட ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பவன் கல்யாண் மகனுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவை ஒத்தி வைத்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் பவன் கல்யாணோ “அந்த பகுதி மக்களுக்கு நான் வருவதாக அறிவித்துவிட்டேன். அவர்கள் காத்திருப்பார்கள். எனவே அவர்களை சந்தித்துவிட்டு நான் சிங்கப்பூர் புறப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் கடந்த 2017ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு தற்போது 8 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
The post சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் படுகாயம்! appeared first on Dinakaran.