வானூர், பிப். 13: திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக பைபாஸ் சாலை வழியாக கன்டெய்னர் லாரி சென்றது. இந்த லாரியை திண்டிவனம் தென்பசார் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஓட்டி சென்றார். கிளியனூர் அடுத்த கேணிப்பட்டு சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுநர் கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மினிவேன், சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி பின்புறமாக மோதியது.
இதில், வேனில் எதிரில் அமர்ந்து வந்த ஆற்காடு ஜோதி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் மோதீஸ்வர் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனை ஓட்டி வந்த ஆரணி தாலுகா அனியாமலை கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் மோகன்குமார் (25) படுகாயம் அடைந்தார். தகவலறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த மோகன்குமாரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.