
சென்னை பூந்தமல்லி-குமணன்சாவடி சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகள், குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சண்முகநாதன், இந்த குப்பைகளை அகற்ற தமிழக அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், குப்பைகளை முழுமையாக அகற்றி விட்டு எதிர்காலத்தில் அங்கு குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், விசாரணையை ஆகஸ்ட் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.