
முனிச்,
ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 36 அணிகள் மோதின. இதில் லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்களின் முடிவில் பி.எஸ்.ஜி அணியும், இன்டர் மிலன் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற அலையன்ஸ் அரினா திடலில் இந்திய நேரப்படி இன்றிரவு நள்ளிரவு 12.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே பி.எஸ்.ஜி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக முதல் பாதியில் அந்த அணி 2 கோல்களை (12 மற்றும் 20வது நிமிடம்) அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் பி.எஸ்.ஜி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக 2வது பாதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி அணி மேலும் 3 கோல்கள் (63, 73 மற்றும் 86வது நிமிடம்) அடித்து அசத்தியது. பதில் கோல் திருப்ப இன்டர் மிலன் அணி எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தி பி.எஸ்.ஜி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.