சாம்பியன்ஸ் டிராபி: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - வங்காளதேச கேப்டன் எச்சரிக்கை

3 hours ago 2

டாக்கா,

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம் என்று வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ எச்சரித்துள்ளார். ஏனெனில் அதற்கு தகுதியான அணியாக இருப்பதாலேயே சாம்பியன்ஸ் டிராபிக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளதாக சாண்டோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் சாம்பியனாக சாதனை படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்த தொடரில் விளையாடும் அனைத்து 8 அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அனைவருமே தரமான அணிகள். எங்கள் அணியில் வெற்றிப் பெறுவதற்கான திறன் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே யாரும் அழுத்தத்தை உணர வேண்டிய அவசியமில்லை. அனைத்து அணிகளும் தங்களுடைய திறமைகளை நம்பி சாம்பியனாக வர விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய தலையெழுத்தில் அல்லா என்ன எழுதியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.

நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுப்பதற்காக கடினமாக முயற்சித்து வருகிறோம். எனவே எங்களுடைய இலக்கை நாங்கள் சாதிப்போம் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களின் திறன் மீது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனியாளாகப் போட்டியை வென்று கொடுக்கும் திறமையைக் கொண்டவர்கள்.. முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது. அதே போல விரல் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்களிடம் சமநிலையைப் பொருந்திய அணி இருக்கிறது. எனவே எந்த அணியையும் எந்த நேரத்திலும் எங்களால் வீழ்த்த முடியும்" என்று கூறினார்.

Read Entire Article