சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

1 week ago 2

பெரும்புதூர், பிப்.13: சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், மூன்று தொழிலாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து 8வது நாளாக சிஐடியூ தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தொழிற்சங்க அங்கீகரிக்க போராடிய சிஐடியூ தொழிலாளர்களை குறிவைத்து தொழிற்சாலை நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக தலைவரை சந்திக்க முற்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி, பணி நேரத்தில் பணியில் ஈடுபடாதது, தொழிற்சாலையில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டது உள்ளிட்ட காரணங்களுக்காக மூன்று தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் கொடுத்தது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வலியுறுத்தியும், தொழிலாளர்கள் மீது நிர்வாகம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் தொடர்ந்து 8வது நாட்களாக சிஐடியூ தொழிலாளர்கள் வேலை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் உள்ள 58 தொழிற்சாலைகளில் சிஐடியூ தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

The post சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article