சாகசத்திற்காக மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி

8 hours ago 1

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "1 முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2024-2025 கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும் சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும் போது புத்தகப்பை மற்றும் உணவு பைக்கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள். கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. ஆகவே, மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனி பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, "படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். போலீசார் வழக்குப்பதிவு கூட செய்யலாம். ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Read Entire Article