
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். இதனையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 336 கேட்ச் பிடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பீல்டராக அதிக கேட்ச் செய்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. விராட் கோலி - 336 கேட்ச்
2. ராகுல் டிராவிட் - 334 கேட்ச்
3. முகமது அசாருதீன் - 261 கேட்ச்
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் செய்த 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஜெயவர்த்தனே - 218 கேட்ச்
2. விராட் கோலி - 161 கேட்ச்
3. ரிக்கி பாண்டிங் - 160 கேட்ச்
4. முகமது அசாருதீன் - 156 கேட்ச்
5. ராஸ் டெய்லர் - 142 கேட்ச்