
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்த கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உள்ளூர் தொடர்களில் அசத்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர், அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் கடந்த நியூசிலாந்து தொடரில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அப்படிப்பட்ட அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு கருண் நாயரை தேர்வு செய்தது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த முடிவு ஒருவருக்கு நியாயமாகவும் மற்றொருவருக்கு அநியாயமாகவும் தெரியலாம். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளூரில் நிறைய ரன்கள் குவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் கவுண்டி தொடரிலும் கொஞ்சம் விளையாடியுள்ளார். சில நேரங்களில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். சர்பராஸ் கான் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 100 ரன்கள் எடுத்தார். பின்னர் ரன்கள் எடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.
சில நேரங்களில் இது போன்ற முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்கிறார்கள். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளூரில் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அது போக இங்கிலாந்து மண்ணில் கவுண்டி தொடரில் விளையாடியுள்ளார். விராட் இல்லாததால், தற்போதுள்ள அணியில் கொஞ்சம் அனுபவம் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த சூழலில் கருண் நாயரின் அனுபவம் உதவும் என்று நாங்கள் உணர்ந்தோம்" என கூறினார்.