
சென்னை,
1980களில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக கொடிகட்டிப் பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். மெளன ராகம், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வந்த கார்த்திக்கிற்கு கவுதம் கார்த்திக் என்கிற மகன் உள்ளார். தன்னைப்போலவே தன் மகனும் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில் கடந்த 2013-ம் ஆண்டு கவுதம் கார்த்திக்கை தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
கவுதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்த கவுதம் கார்த்திக் அவரை கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. நடிகர் ஜெயம் ரவி கூட தன் பெயரை 'ரவி மோகன்' என மாற்றிக்கொண்டார். அந்த வகையில் நடிகர் கவுதம் கார்த்திக் தன் பெயரை 'கவுதம் ராம் கார்த்திக்' என மாற்றினார்.
சமீபகாலமாக இவரை இயக்குநர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், தனது புதிய மேலாளர் பெயரைக் குறிப்பிட்டு கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "எனக்குத் தொடர்ச்சியாக வரும் சில பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக பலரும் என்னைத் தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போனதாகக் கூறினார்கள். இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைக் கூறுகிறேன். 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து என்னுடைய மேலாளராக கோபிநாத் திரவியம் இருக்கிறார். என்னைத் தொடர்புகொள்வதில் யாருக்காவது சிரமம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்." என்றார்.