சம்பலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ராகுல் காந்தியின் அரசியல் சாசன உரிமை - பிரியங்கா காந்தி

6 months ago 24

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாடு தலம் இதற்கு முன் இந்து மத கடவுள் ஹரிஹரின் வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செல்ல திட்டமிட்டிருந்தார்.

இதன்படி ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சம்பல் மாவட்டத்திற்கு காரில் செல்ல புறப்பட்டனர். ஆனால், டெல்லி , உத்தரபிரதேச எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் காங்கிரசார் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி, தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி சம்பல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வது அவருக்கான அரசியல் சாசன உரிமை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விடாமல் உத்தர பிரதேச பா.ஜ.க. அரசு அவரை தடுத்து வருகிறது" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், "நீதியின் குரலுக்கு பா.ஜ.க. பயப்படுகிறது. மனிதநேயத்திற்கும், அன்பிற்கும் பா.ஜ.க. பயப்படுகிறது. சகோதரத்துவம், ஒற்றுமைக்கு பா.ஜ.க. பயப்படுகிறது. தனது 'வெறுப்பின் சந்தையை' காப்பாற்ற, பா.ஜ.க. 'அன்பின் ஒவ்வொரு செய்தியையும்' தடுக்க விரும்புகிறது. ஆனால் அன்பின் செய்தியும் நிற்காது, உண்மையின் குரலும் நசுக்கப்படாது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article