
சென்னை,
தமிழில் 'ராஜாராணி' படத்தில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. "நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா" ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக "சூக்ஷம தர்ஷினி" என்ற படம் வெளியானது. ஆனால் அதன் பின் திடீரென நஸ்ரியா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், பல மாதங்களாக இன்ஸ்டாவில் புகைப்படங்கள் கூட எதுவும் வெளியிடவில்லை.
இந்தநிலையில், நடிகை நஸ்ரியா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் ஏன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருப்பது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது குறித்து பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் எப்போதும் இந்த சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வந்தேன். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, எனது உடல்நிலை சிக்கல் மற்றும் தனிப்பட்ட சவால்களால் நான் போராடி வருகிறேன். அவை எனக்கு எல்லோருடனும் தொடர்பில் இருப்பதை கடினமாக்கியுள்ளது.
எனது 30வது பிறந்தநாள், புத்தாண்டு மட்டுமல்லாது எனது 'சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தின் வெற்றி, மற்றும் பல முக்கியமான தருணங்களைக் கொண்டாடுவதை நான் தவறவிட்டேன். நான் ஏன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன் என்பதை விளக்காததற்கும், நீங்கள் விடுத்த அழைப்புகளை எடுக்காததற்கும் அல்லது அதற்கு பதிலளிக்காததற்கும் எனது அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். நான் முழுமையாக வெளியுலகை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.
வேலைக்காக என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்த எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இல்லாததால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன். ஒரு நல்ல விஷயமாக, நேற்று சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி.
நான் முழுவதுமாக குணமாக இன்னும் காலம் ஆகும். இருப்பினும் நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்ப எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம், ஆனால் நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்கள் முடிவில்லாத ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.