சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா

7 hours ago 2

வாஷிங்டன்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போர் எதிரொலியாக, மக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. இதற்காக ரஷிய அதிபர் புதினுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா நிறுத்தவில்லை. ஆனால், சமீபத்தில் சிக்கன நடவடிக்கையாக உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்தியது. இதேபோன்று, உளவு தகவலையும் நிறுத்தியது. இந்த சூழலில், ரஷியா உக்ரைனை கடுமையாக தாக்கியது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கோரினார்.

உக்ரைனுக்கான ஆயுத விநியோகம் நிறுத்தம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்பு வெளியான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி பேசினார். அப்போது அவர், நாங்கள் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க முடிவு செய்திருக்கிறோம். அதுவும் முதல்கட்டத்தில் தற்காப்புக்கான ஆயுதங்கள் வழங்கப்படும் என கூறினார்.

உக்ரைன் மிக மிக கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. விளாடிமிர் புதினின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன் என்றும் கூறினார். இந்நிலையில், உக்ரைனுக்கான ஆயுதங்களை வழங்கும் பணியை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அவற்றில், 155 மி.மீ. அளவிலான வெடிபொருட்கள் மற்றும் துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் அடங்கும்.

எனினும், எப்போதிருந்து இந்த ஆயுத விநியோகம் தொடங்கியது என்ற சரியான தகவல் வெளியிடப்படவில்லை. இதுபற்றி அமெரிக்காவின் அதிகாரிகள் கூறும்போது, டிரம்புடன் ஆலோசிக்காமல் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை விதித்து விட்டார்.

எந்த அளவுக்கு ஆயுதங்கள் இருப்பில் உள்ளன என பென்டகன் ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கையை ஹெக்சேத் எடுத்துள்ளார் என தெரிகிறது. இந்நிலையில், இந்த தற்காலிக தடை முடிவுக்கு வந்துள்ளது என பெயர் வெளியிட விருப்பமில்லாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், ரஷியாவுக்கு எதிரான போரை உக்ரைன் இன்னும் தீவிரப்படுத்த கூடும் என பார்க்கப்படுகிறது. இது மீண்டும் உலகளாவிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போரை தீவிரப்படுத்த கூடிய ஒன்றாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

Read Entire Article