* கலவரங்களை தூண்டலாம் என சிலர் நினைத்தாலும், மக்களே முறியடித்துவிடுகிறார்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: சட்டம் – ஒழுங்கு சீராகவும், அமைதியான மாநிலமாகவும் இருப்பதால்தான், சாதி சண்டைகள், மத கலவரங்கள், வன்முறைகள் இல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்து விடுகிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக 6வது முறையாக ஆட்சியமைத்து 4வது ஆண்டை நிறைவு செய்து, 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் பொறுப்பேற்ற மே 7ம் தேதிக்கு இன்னும் 7 நாட்கள்தான் இருக்கிறது. இந்த நேரத்தில், இதுவரை செயல்படுத்தியிருக்கக் கூடிய திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7வது முறையும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால், நிர்வாக கட்டமைப்புகள் தரைமட்டத்துக்கு போய், கட்டாந்தரையில் தவழ்ந்து கொண்டு இருந்தது. தவழ்ந்து கொண்டிருந்த இந்த இழிவைப் போக்கி, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாட்டு மக்கள் திமுகவை ஆட்சி பொறுப்பில் அமர்த்தினார்கள். மக்களுடைய நம்பிக்கைக்கேற்ப தமிழ்நாடு இன்றைக்கு எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து இருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி துணிச்சலுடன், பெருமையுடன் நான் சொல்லிக் கொள்கிறேன்.
2024-25ம் ஆண்டில் இந்தியாவிலே நம்பர் 1 ஆக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றிலே இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்ததில்லை. நம்முடைய வளர்ச்சி 9.69 விழுக்காடு. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவினுடைய வளர்ச்சி எவ்வளவு தெரியுமா, 6.5 விழுக்காடு, இதுதான் சாதனை. தமிழ்நாட்டினுடைய ஜிஎஸ்டிபி 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2024-25ம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம், தேசிய சராசரி 2 லட்சத்து 6 ஆயிரம் தான். இதுவரை இல்லாத உச்சமாக, 14.65 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு கடந்த 2024-2025 நிதியாண்டில் சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் ஏற்றுமதி அளவில், தமிழ்நாடு மட்டுமே 41.23 விழுக்காடு பங்கு வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வணிக வரியாக வந்திருப்பதே, நம்முடைய வளர்ச்சிக்கான சான்று.
அகில இந்திய அளவில் 50 விழுக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வக வசதிகள் இருக்கின்றன. ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் 98.3 விழுக்காடு பள்ளிகளில் இந்த வசதி இருக்கிறது. இந்திய அளவில் 28.4 விழுக்காடாக இருக்கின்ற உயர்கல்வி சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 47 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அதிகமாக பி.எச்.டி படிக்கிற மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம்.
என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில், தமிழ்நாட்டில் இருக்கின்ற 18 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனை குழு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது.
இந்த சமூக முன்னேற்ற குறியீட்டில், பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம். இந்தியா முழுவதும் 11.2 விழுக்காடு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழுகிற நிலையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் 1.43 விழுக்காடுதான். உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, தொற்றா நோய்களின் கட்டுப்பாடு குறித்து ஐசிஎம்ஆர் நிறுவனம் நடத்திய சர்வேயில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்ற இடமும் தமிழ்நாடுதான். 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகளுடன் நாம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். 27 லட்சத்து 75 ஆயிரம் நபர்கள் பணிபுரிகிறார்கள். 5.35 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளோடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றோம். நம்முடைய திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களால், தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்திலே 47 விழுக்காடுடன் இந்தியாவிலேயே நம்பர்-1 ஆக இருக்கின்றோம்.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். சூரிய சக்தியில் நான்காவது இடம். புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் சிறந்த செயல்திறன் கொண்டவர்கள், ஸ்டார்ட் அப் தரவரிசை பட்டியலில், 2018ல் கடைசி இடத்தில் இருந்த நிலையை மாற்றி, 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறோம்.
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதல் இடம், தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலம், எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தி திறனில் முதலிடம், மக்காச்சோளம் உற்பத்தி திறனில் இரண்டாம் இடம், நெல் உற்பத்தி திறனில் மூன்றாம் இடம், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை குறைத்திருக்கிறோம். எடை குறைவாக பிறந்த குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கிறோம். இந்திய நீதி அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தான் காவல்துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகம்.
இதுவரை இருந்த அரசுகளை காமராஜர் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு, எம்ஜிஆர் அரசு என்று சொல்வது வழக்கம். அந்த வரிசையில் இதனை ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல், திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன். ஒரு தனி மனிதனின் ஆட்சி அல்ல. ஒரு தத்துவத்தின் ஆட்சி என்பதன் அடையாளமாகத்தான் திராவிட மாடல் அரசு என்று சொன்னேன். என்னை பொறுத்தவரைக்கும், கொள்கையும் இயக்கமும்தான் முன்னிலை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும்.
அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான – முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறை தான் காரணம். ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும்; தொழிற்சாலைகள் வரும்; கல்வி மேம்படும்; பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள்; விளையாட்டு துறை மேம்படும்;
உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும்; சுற்றுலா பயணிகள் வருவார்கள்; கோயில்கள் தழைக்கும். தமிழ்நாட்டில் நிலவும் இந்த அமைதிக்கு காரணம், என்னுடைய துறையான, காவல்துறை. சட்டம் – ஒழுங்கை முறையாக பேணி, இந்த சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறை சார்ந்த அனைவருக்கும் நானும் – நீங்களும் – தமிழ்நாட்டு மக்களும் நன்றிக்குரியவர்கள்.
சட்டம் – ஒழுங்கு சீராகவும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ, மதக் கலவரங்களோ, பெரிய கலவரங்களோ, வன்முறைகளோ இல்லை. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள். இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் – ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
* மேலே பாம்பு – கீழே நரிகள்
தமிழ்நாடு சாதனைக்கு மேல் சாதனையை செய்து கொண்டிருக்கிறது, இந்த சாதனைகளையெல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு – கீழே நரிகள், குதித்தால் அகழி – ஓடினால் தடுப்புச் சுவர்கள். இதற்கெல்லாம் இடையில் மாட்டிக்கொண்ட மனிதனை போல ஒருபக்கம் ஒன்றிய அரசு – மறுபக்கம் ஆளுநர் – இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று தடைகளை கடந்து நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இது.
இவையெல்லாம் ஸ்டாலின் என்ற தனிமனிதனுடைய சாதனைகள் அல்ல; என்னுடைய அமைச்சரவை, அதிகாரிகள் – அவர்களுடைய கூட்டு உழைப்பிற்கு கிடைத்த பலன். எல்லாவற்றிலும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவன் இல்லை நான். இது ஒரு கட்சியினுடைய அரசு அல்ல. ஒரு கொள்கையினுடைய அரசு. அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வர் கூறினார்.
* இது தமிழ்நாடு..
உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்: இது, மணிப்பூர் அல்ல. இது, காஷ்மீர் அல்ல. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை. இது, தமிழ்நாடு! அதை மறந்துவிடாதீர்கள்
The post சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதால்தான் சாதி சண்டை, மத கலவரம் இன்றி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது appeared first on Dinakaran.