கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூசா 2.0, பாரதியார் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிதியின் மூலம் மூலிகை தோட்டம் தாவரவியல் துறையால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூலிகைத் தோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரிய, உள்ளூர் மற்றும் அழிந்து வரும் தாவர இனங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த மூலிகை தோட்டத்திற்கு கடம்பமரம், முள்சீதா, ஜாதிக்காய், பெருங்காயம், திப்பிலி போன்ற பல்வேறு வகையான மூலிகை தாவரங்கள், உரங்கள் மற்றும் தொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட தாவரங்கள், உரங்கள் போன்றவற்றில் போலி பில்களை கணக்கு காட்டி ரூ.50 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறுகிய கால இடைவெளியில் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு விலைகளில் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பது தணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. டெண்டர் வழிமுறைகளை கடைபிடிக்காமல் மூலிகை பொருட்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு விவகாரத்தில் ரூசா நிதிகளின் இயக்குநர், நிதி அதிகாரி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.50 லட்சம் முறைகேடு appeared first on Dinakaran.