கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, ஆபீதா தம்பதி ஆகியோர் பீப் பிரியாணி கடை நடத்தக்கூடாது என்று கோவையை சேர்ந்த பாஜ நிர்வாகி சுப்பிரமணி மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரவி, ஆபிதா தம்பதி போலீசில் கொடுத்த புகாரின்படி, சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பாஜ கண்டனம் தெரிவித்த நிலையில், சுப்பிரமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்பிரமணியை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீசும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட தலைவர் வின்சென்ட் தலைமையில் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜ அலுவலகத்தை நோக்கி சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் சாலையில் மாட்டிறைச்சியை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post கோவை பாஜ அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீசி போராட்டம் appeared first on Dinakaran.