
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் 1வது தெருவை சேர்ந்த குலாம் முகைதீன் (வயது 60). இவர் மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நசீர்பானு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குலாம் முகைதீன் கடந்த 21ம்தேதி காலை வீட்டில் இருந்து மோட்டார் பைக்கில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மாதாங்கோவில் ரோடு வளைவில் அவர் சென்று கொண்டிருந்தபோது, தேனியில் இருந்து பார்சல் சர்வீஸ் ஏற்றி வந்த லாரி கோவில்பட்டியில் டெலிவரியை முடித்துவிட்டு, தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குலாம் முகைதீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மதுரை மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த ஜெகன் ராமனை கைது செய்து விசாரணை செய்தனர்.