
திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன்? எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், கோவில் சொத்துகளை பாதுகாக்கும் விவகாரத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை முறையாக செய்வதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து வாடகை பாக்கி அரசிடமிருந்து பெறப்பட்டு திருச்செந்தூர் கோவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.