
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், பல்வேறு பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
2-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். வாகன சேவையை முன்னிட்டு பக்தர்களின் ஊர்வலங்களும், பஜனைகளும் மற்றும் கோலாட்டங்களும் நடைபெற்றன.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது. அப்போது கலைக்குழுக்களின் பாடல்கள் மற்றும் நடனங்கள் நடந்தன.
திருமலையின் இரு ஜீயர்கள், தேவஸ்தான நிதி அதிகாரி ஸ்ரீபாலாஜி மற்றும் ஊழியர்கள், திரளான பக்தர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 6-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 9-ந்தேதி தேரோட்டம், 10-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.