திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.45 மணியளவில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவின் அருகே உள்ள எம்ஆர்ஐ ஸ்கேனிங் சர்வர் அறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் புகை பரவியதால் அங்கிருந்த நோயாளிகள் அலறினர். இதையடுத்து ஊழியர்கள் நோயாளிகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர்.
ஆனாலும் கங்கா (34), கங்காதரன் (70), கோபாலன் (65), சுரேந்திரன் (59) மற்றும் நசீரா (44) ஆகிய நோயாளிகள் உயிரிழந்தனர். மற்ற சிகிச்சை பிரிவில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். புகை மூட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து 5 பேரை வெளியே கொண்டு வந்ததால் தான் இறந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே கூறமுடியும் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் சஜீத்குமார் கூறினார்.
* சிறப்பு மருத்துவக் குழு விசாரணை
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதன் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஆர்ஐ ஸ்கேன் எந்திரத்திற்காக வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ் வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது. 5 பேர் பலியானது குறித்து சிறப்பு மருத்துவக் குழு விசாரிக்கும். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தான் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் திடீர் புகை 5 நோயாளிகள் மூச்சு திணறி பலி appeared first on Dinakaran.