கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

4 hours ago 3

சென்னை : கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் எனவும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் எனவும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பல கோயில் விழாக்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே, முதல் மரியாதைதான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்,” எனத் தெரிவித்த நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை முடித்து வைத்தார்.

The post கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article