ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் அருகே நான்கு வழி சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். நள்ளிவில் நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாகர்கோவில் பறக்கை ேராடு பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். அவரது மகன் ரெயான் முகமது (20). இவரது நண்பர் முகமது ஷபான் சிராஜ் (20). இவர் வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 2 பேரும் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் காவல்கிணறு சென்று விட்டு பைக்கில், நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
நாகர்கோவில் – அப்டா மார்க்கெட் இடையிலான நான்கு வழிச்சாலையில், திருப்பதிசாரம் டோல்கேட் கடந்து பைக் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பதிசாரம் திருப்பம் அருகே வரும் திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற பைக், சென்டர் மீடியனில் மோதியது. இதில் பைக்கில் இருந்த ரெயான் முகமது மற்றும் முகமது ஷபான் சிராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் இருவரும் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆரல்வாய்மொழி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் இறந்த தகவல் அறிந்ததும் குடும்பத்தினரும் மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தால் அப்டா மாக்கெட் – திருப்பதிசாரம் டோல்கேட் இடையே நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post நாகர்கோவில் அருகே நள்ளிரவு விபத்து: 4 வழி சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.