சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்; குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் கலைஞரால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட குடியிருப்பின் அளவு 216 ச.அடி அளவு ஆகும். அன்றைய தினம் தரை மற்றும் 2 தளங்களுடன் 1476 குடியிருப்புகள் கட்டப்பட்டது.
இப்பொழுது நமது அரசு பொறுப்பேற்ற பிறகு 216 ச.அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதி நமது முதலமைச்சர் குறைந்தது 400 ச.அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் கட்டப்பட்டு வரும் அனைத்து குடியிருப்புகளும் 400 ச.அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றது. வருகின்ற டிசம்பர் 2025 க்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும். இவ்வரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க வாரியத்தின் மூலம் கடந்த 30 – 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தினை கண்டறிய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின் படி சென்னையில் மட்டும் 30000 குடியிருப்புகளும் , மற்ற மாவட்டங்களில் 3000 ற்க்கு மேற்பட்ட வீடுகள் சிதிலமடைந்து உள்ளது. இதனை படிப்படியாக இடித்து விட்டு மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 43 திட்டப்பகுதிகளில் ரூ.3088 கோடி மதிப்பீட்டில் 18275 குடியிருப்புகள் கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 34 திட்டப்பகுதிகளில் ரூ.3123 கோடி மதிப்பீட்டில் 15294 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் கண்டயறியப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.