கோடை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுப்பு ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

8 hours ago 3

வேலூர்: கோடை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரமாகப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ்2, பிளஸ்1 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்றுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் கோடை விடுமுறை துவங்க உள்ளது.

ஒரு மாத காலம் விடுமுறை என்பதால் நகரப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் ஏப்ரல் 30ம்தேதி வரை சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. முக்கிய வழித்தடங்களில் செல்லும் அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பி விட்டதால், கடைசி நேர முயற்சியாக தட்கல் முறையில் டிக்கெட் எடுத்து பயணிக்க மக்கள் முயற்சித்து வருகின்றனர். ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக (முந்தைய நாள்) தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இதனை ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில புரோக்கர்கள், முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதிலும் கோடை விடுமுறை நாட்களில் இத்தகைய முறைகேடு அதிகளவு நடக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க ஆர்பிஎப் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்களை கண்காணிக்கின்றனர். மேலும் ரயில்வே கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜென்சிகளில் சோதனையிட்டு வருகின்றனர்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் டிக்கெட்டை போலி பெயர்களில் பதிவு செய்து, அதிக விலைக்கு விற்கும் நபர்களை பிடிக்க, வழக்கத்தை விட தொடர்ந்து அதிகளவு தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் நபர்களை காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் கண்காணிக்கின்றனர். அதேபோல் ஒரேநபர் பல பெயர்களில் ஐஆர்சிடிசி ஐடிகளை உருவாக்கி தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்கிறாரா? எனவும் கம்ப்யூட்டர் மையங்களிலும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆர்பிஎப் போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிக்க அதிகப்படியானோர் விரும்புகின்றனர். இந்த நேரத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். தனியார் ஏஜென்சிகள் மற்றும் சில கணினி மையங்களில் அதிக பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக போலி பெயர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டிக்கெட் புக்கிங் மையங்களில் தொடர் சோதனையை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோடை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுப்பு ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article