சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடந்தது. 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21ம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடந்தது. மேலும் 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகளுக்கு ஏப்.9ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதியம் தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22ம் தேதியில் இருந்தும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் 2025-26ம் கல்வியாண்டில் 2.6.2025 (திங்கட்கிழமை) அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் ஜூன் 16ல் திறப்பு appeared first on Dinakaran.