ஆனைமலை: கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருமழை தொடங்கி உள்ளபோதும் பொள்ளாச்சி இளநீர் குறையவில்லை. இதனால், விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவைக்கு அதிக கிராக்கி உள்ளது. இதில், இந்த ஆண்டு மே மாதம் துவக்கம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கத்தின்போது, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அதிகளவு அனுப்பப்பட்டது.
பொள்ளாச்சி இளநீருக்கு அதிக கிராக்கி என்பதால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வரை தோட்டங்களில் நேரடி விலையாக இளநீரை ரூ.48 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருமழை தொடங்கியது. இதனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இளநீர் உற்பத்தி கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு குறைந்த அளவே இளநீர் அனுப்பப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக மாநில பகுதிக்கு இளநீர் தேவை அதிகமாக உள்ளது. இதனால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து அனுப்பப்படும் இளநீர் விலை தொடர்ந்து உயர்வாக உள்ளது.
இதில் நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.47 வரை விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், இன்னும் சில மாதங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினர்.
The post கோடை காலம் முடிந்தும் விலை குறையாத பொள்ளாச்சி இளநீர் appeared first on Dinakaran.