வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு மாதத்தில் 3 நிறங்கள் மாறும் தில்லை மரத்தின் இலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாற காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான், வெளிமான் மற்றும் குதிரை, நரி, குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இங்கு ராமர் பாதம் அமைந்துள்ள இடம் அருகே 150க்கு மேற்பட்ட மூலிகை வனமும் உள்ளது. கோடியக்கரைச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்யாசி, முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் இரு புறமும் காணப்படும் தில்லை மரத்து இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள் மூன்று நிறங்களில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும் சில நாட்களில் மட்டுமே பின்னர் மீண்டும் இந்த இலைகள் பசுமைக்கு மாறி விடுகிறது.
சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் இந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும் பொழுது நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தல விருட்சமாக உள்ளது. இந்த மரத்தின் இலைகள் ஒரே மாதத்தில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மாறி மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறிவிடுகிறது. இது குறித்து கோடியக்கரை ஜோசப் டேனியல் கூறும்போது, கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனியப்பன் ஏரி பழைய லைட் ஹவுஸ் பகுதியில் இந்த தில்லை மரம் காணப்படுகிறது.
இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகும் தொடர்ந்து மஞ்சள், சிவப்பு என்று நிறங்கள் மாறி உதிர்ந்து, மீண்டும் பசுமையாக மாறிவிடும். இந்த நிகழ்வில் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் நடந்து முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்த பாலானது உடலில் பட்டால் அரிப்பு உண்டாகி புண்கள் ஏற்படும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகை பார்த்து ரசித்து மட்டும் செல்ல வேண்டும். இலைகளை பறிப்பதோ, அதில் உள்ள காய்களை பறிப்பது ஆபத்தை தேடி தரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு மாதத்தில் 3 நிறங்கள் மாறும் தில்லை மரம்: சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.