சென்னை: கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் – சிறுசேரி வரை அமைய கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது.
35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ ரெயில் 3 அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது. மயிலாப்பூர் பகுதியில் அமைய உள்ள மெட்ரோ சுரங்கபாதை பணிகள் கடினமான பாறையில் சவாலான வகையில் அமைய உள்ளது. இந்த சுரங்க பாதைகள் அடுக்கு சுரங்கமாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே இருந்து கட்டப்படஉள்ளது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொளத்தூர் முதல் வில்லிவாக்கம் இடையேயான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான சுரங்கம் தோண்டும் பணி இம்மாதம் இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் கொளத்தூர் பகுதியில் இந்த மாதத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக குறிஞ்சி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் மாதவரம் முதல் ரெட்டேரி வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் சந்திப்பிலிருந்து வில்லிவாக்கம் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் பயணிக்க உள்ளது. மீண்டும் வில்லிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை உயர்மட்ட பாதையில் செல்கிறது. இந்த சுரங்கப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை மெட்ரோ செல்கிறது. இந்த 5 கிலோ மீட்டரில் கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசநகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை, வில்லிவாக்கம் பேருந்து முனையம் ஆகிய 5 மெட்ரோ நிலையங்கள் அமைகிறது. இதற்கான சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதத்திற்குள் தொடங்க உள்ளது. இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் குறிஞ்சி என பெயரிடப்பட்ட இயந்திரம் சுரங்கம் தோண்டுகிறது.
* இந்த வழித்தடத்தில் மாதவரம் முதல் ரெட்டேரி வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* கொளத்தூர் சந்திப்பிலிருந்து வில்லிவாக்கம் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் பயணிக்க உள்ளது. மீண்டும் வில்லிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை உயர்மட்ட பாதையில் செல்கிறது.
The post கொளத்தூர்-வில்லிவாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் பணி இந்த மாதம் தொடக்கம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.