
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசந்தி பகுதியை சேர்ந்த பிமல் மொண்டல் என்ற நபருக்கும், அவரது அண்ணனின் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக அண்ணனின் மனைவி சதி மொண்டலை கொலை செய்யப்போவதாக பிமல் மொண்டல் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை பிமல் மற்றும் சதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிமல் கூர்மையான ஆயுதத்தை எடுத்து சதியை கொலை செய்து செய்துள்ளார். பின்னர் சதியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக நடந்து சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது, நீண்ட வருடங்களாக தனக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு பழி தீர்த்துவிட்டதாக கூறிக்கொண்டே அவர் சென்றுள்ளார்.
இவ்வாறு தனது அண்ணியின் தலையை வெட்டி எடுத்து பிமல் நடந்து சென்றதைப் பார்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிமல் மிகவும் ஆத்திரத்தோடு நடந்து சென்றதால் அவரை தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை என்றும், குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறு இவ்வாறு கொடூரமான கொலையில் சென்று முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்துவிட்டு தெருவில் அண்ணியின் தலையோடு நடந்து சென்ற பிமல், நேராக காவல் நிலையத்திற்கு சென்று போலீசிடம் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.