
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் டெதியபாடா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சைதர் வாசவா. இவர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி வளர்ச்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தான் சிபாரிசு செய்த நபர்கள் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெறாதது குறித்து சக்பரா கிராம பஞ்சாயத்து தலைவியிடம் எம்.எல்.ஏ. சைதர் வாசவா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த டெதியபாடா பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் வசவா குறுக்கிட்டு சைதரை சமாதானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. சைதர் தனது கையில் இருந்த செல்போனை சஞ்சய் மீது எறிந்துள்ளார். மேலும், அங்கு இருந்த கண்ணாடி துண்டையும் சஞ்சய் மீது வீசியுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எம்.எல்.ஏ. சைதர் வாசவா தன்னை தாக்கியதாக பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் வசவா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், எம்.எல்.ஏ. சைதர் வாசவாவை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சைதர் வாசவா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வதோதரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.