
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது 4 ஆயிரத்து 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு அறிகுறிகள் மோசமடைந்தால் உடனடியான மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.