
உலகம் முழுவதும் வசிக்கும் பொதுமக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் பங்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கொண்டு வந்த இந்த தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், நடப்பாண்டு உலக செவிலியர் தினத்தின் கருப்பொருள் 'செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது' என்பதாகும்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஒரு புள்ளியியல் நிபுணர், சமூக சீர்திருத்தவாதி, மேலும் போரின்போது செவிலியராகவும் பணியாற்றினார். நவீன நர்சிங் துறையின் நிறுவனராக அவர் கருதப்படுகிறார். அவர் 'கை விளக்கேந்திய காரிகை' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார். சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய நேரத்தில், செவிலியர்களின் தியாகம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதில் பலர் தங்கள் உயிரை கூட இழந்தனர். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது. எனவே உயிரை காக்கும் செவிலியருக்கு இன்று வாழ்த்து கூற மறக்கவேண்டாம்.