மதுரை, ஜூன் 23: தமிழக நெடுஞ்சாலைத்துறையின் மதுரை கோட்டப்பிரிவின் கீழ் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.190.40 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, 10,980 ச.மீட்டர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலையில், பிரதான சாலை சந்திப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் கடந்த, 19ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அமெரிக்கன் கல்லூரி அருகில் செயல்பட்டு வந்த வணிக வளாக கட்டிடத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான துணிக்கடையை அகற்றும் பணிகளும் நெடுஞ்சாலைத்துறையின் தெற்கு உதவி கோட்ட பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் வெங்கடேஷ்பாபு தலைமையில், நேற்று முன்தினம் துவங்கின.
அதேநேரம், அமெரிக்கன் கல்லூரியின் நுழைவாயிலை ஒட்டிய சில பகுதிகளை அகற்றுவது தொடர்பாக நில ஆர்ஜித பணிகள் மாநில வருவாய் நிர்வாக ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தபின் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்குமெனவும், அவை முடிந்த பின்பே கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கான மேல்தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post கோரிப்பாளையம் மேம்பால பணிகள் வணிக கட்டிடம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.