
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
அந்த கட்டிடம் வெளிமாநில தொழிலாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த கட்டிடத்தில் 17 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் சிலர் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்ட நிலையில், கட்டிடம் இடிந்தபோது உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
கட்டிடம் இடிந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளை அகற்றி 3 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் சில தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.