பொள்ளாச்சி: கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் வேனில் மளிகை பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் இருந்த மளிகை பொருட்கள் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், 25க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 1 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து வேன் மூலம் புலையிலை பொருட்களை பொள்ளாச்சிக்கு கடத்தி வந்து அவற்றை அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்புவது தெரிய வந்தது. இதை அடுத்து திருச்சியை சேர்ந்த வேன் டிரைவர் முகமது ஹபீஸ் (38) என்பவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வேனில் கடத்திய 1 டன் புகையிலை பறிமுதல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.