திருவனந்தபுரம்: கேரளாவில் மழை தீவிரமடைந்துள்ளது. இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த வருடம் 4 நாள் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கேரளா முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வடமாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதற்கிடையே கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருவனந்தபுரம், கொல்லம் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட 7 மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்பட 7 மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25, 26 ஆகிய தேதிகளில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் கேரளா, லட்சத்தீவு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.