கேரட் அறுவடையில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநில தொழிலாளர்கள்; உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு

1 day ago 2

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கேரட் அறுவடையில் வடமாநில தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலைத் தொழில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி உட்பட பல்வேறு மலைக்காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

ஆனால் தற்போது அதிக அளவு கேரட் பயிரிடப்படுகிறது. நான் ஒன்றுக்கு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை கேரட் அறுவடை செய்யப்பட்டு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்ட நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாள்தோறும் இந்த கேரட் அறுவடை அதிகாலை 4 மணிக்கு துவங்கி 10 மணிக்கு முன்னதாக முடிந்துவிடும்.

இதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை இந்த தொழிலில் உள்ளூர் மக்கள் மட்டுமே இருந்து வந்தனர். ஆனால், கடந்த நான்கு 5 ஆண்டுகளாக வட மாநிலங்களில் இருந்து இங்கு வேலை தேடி வந்த தொழிலாளர்கள் பலரும் இந்த கேரட் அறுவடையை கற்றுக்கொண்டனர்.

தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கேரட் அறுவடையில் இந்த தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கேரட் அறுவடையில் ஏஜென்ட்களாக செயல்படும் சிலர் தற்போது உள்ளூர் தொழிலாளர்களை விட வடமாநில தொழிலாளர்களையே அதிகம் ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது.

வட மாநில தொழிலாளர்கள் ஆண், பெண் என இரு பாலரும் பணிக்கு வருவதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத நிலையில் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சாதாரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் முதல் ரூ.1200 வரை இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியம் கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது கேரட் அறுவடையில் வட மாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் காட்டும் நிலையில் உள்ளூர் மக்கள் வேலை இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உள்ளூர் மக்களுக்கும் இந்த கேரட் அறுவடையில் முக்கியத்துவம் அளித்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்ளூர் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post கேரட் அறுவடையில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநில தொழிலாளர்கள்; உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article