கூட்டணிக்கு வேட்டு வைக்க மாஜி தேசிய செயலாளரே போதும் என புலம்பும் மலராத கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 4

‘‘மாங்கனி மாவட்டத்தில் குக்கர் கட்சிக்கு ஒரு சீட் இருக்குது என்ற குரல் ஓங்கி ஒலிக்குதாமே எப்படி..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் குக்கரின் குரல் ஓங்கி ஒலிக்குதாம்.. இங்கு 11 தொகுதிகள் இருந்தாலும் பேர் பெற்ற தொகுதி ஒன்றுதானாம்.. அந்த தொகுதியில் போட்டியிட குக்கர் கட்சிக்காரர் ஒருவர் ரெடியாகிகிட்டு இருக்காராம்.. இலைக்கட்சி தலைவரின் ஊரில் சீட் என்பது எட்டாக்கனியாகத்தானே இருக்கும் என்றால், யார் சொன்னது என பதில் சொல்றாராம்.. மலராத கட்சியுடன் நாங்கள் இருக்கிறோம்.. இலைக்கட்சிதான் எங்களுடன் வந்து சேர்ந்தது என அடிச்சி சொல்றாராம்..

மலராத கட்சியுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறிவிட்டு, டெல்லியின் காலில் விழுந்த விவரம் பெரியதுங்க.. தனது குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்வதை முழுமையாக கேட்கிறேன் என கூறிவிட்டு வந்தாருங்க.. ஆனால் கட்சிக்காரர்களிடம் வேறுக்கதை சொல்றாரு.. மலராத கட்சியுடன் இருக்கும் நாங்கள் கேட்கும் சீட்டை கேட்டு பெறுவோம்.. அதில் இந்த தொகுதி எனக்கு உறுதியாகி விட்டதுன்னு சொல்லும் குக்கர்கட்சிக்காரர், ஜெ., ஜா என கட்சி உடைந்த நேரத்தில் சேவல் சின்னத்தில் முதல் வேட்பாளராக மம்மி என்னைத்தான் அறிவிச்சாங்க..

32 ஆயிரம் ஓட்டுகள் பெற்றதுடன் 2 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வியை சந்தித்தேன்.. ஆனால் தற்போதைய இலைக்கட்சி தலைவரோ, வெறும் 19 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால்தான் அவர் மா.செ.வாக ஆனார். எனவே மாங்கனி மாவட்டத்தில் குக்கர் கட்சிக்கு ஒரு சீட் இருக்குது.. அதில் நான் போட்டியிடுவேன். இலைக்கட்சிக்காரங்க எனக்கு ஓட்டு போடுவாங்கன்னு அடிச்சி சொல்றாரு.. ஆனால், இது ஒரு இலவுகாத்த கிளி கதைதான் என இலைக்கட்சி நிர்வாகிகள் சொல்லிவிட்டு சிரிக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இருப்பை காட்டிக்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்று மீனவர்களுக்கு ஆறுதல் சொல்லப்போன இலைக்கட்சி மாஜி அமைச்சர் கடும் அப்செட்டில் திரும்பினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் மணியானவர் அவ்வப்போது அரசியல் ரீதியாக தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து வருகிறாராம்.. இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மணியானவர் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆறுதல் கூற சென்றாராம்..

அப்போது அந்த மீனவர்கள், எங்களை தாக்கும் இலங்கை கடற்படையை தடுக்க கடந்த 10 ஆண்டு காலமாக மலராத கட்சி எந்த முயற்சியும் எடுக்க வில்லை என வேதனையுடன் கூறியிருக்காங்க.. முக்கியமாக, மலராத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள இலைக்கட்சி சார்பில் நீங்கள் எடுத்து கூறி மீனவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருக்காங்க.. இதைக் கேட்டு ஆறுதல் சொல்லப் போன மாஜி அமைச்சர் கடும் அப்செட்டில் திரும்பி சென்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி தனி பிரிவில் உலா வரும் ரெண்டு பேரால் ஆள விடுங்க சாமி என ஓட்டம் பிடிக்கிறாங்களாமே பாதிக்கப்பட்ட காக்கிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பலாப்பழத்துக்கு பெயர்போன மாவட்டத்தில் கோவில் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள காக்கி நிலையத்தில் தனி பிரிவில் முத்து ராஜாவாக 2 பேர் உலா வருகிறார்களாம்.. ஸ்டேஷனில் அனைத்து கோல்மால் வேலைகளையும் கச்சிதமாக செய்வதில் வல்லவராக இருவரும் திகழ்கிறார்களாம்.. லைசென்சு போர்வையில் கல்லா கட்டும் இருவரையும் இடதுசாரிகள் மேடை போட்டு கிழிகிழி என கிழித்தார்களாம்.. ஆனால் முத்து ராஜாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் உலாவுவதோடு, எதிரிகள் குறித்து மேலிடத்தில் கட்டுக் கதைகளை அளந்து விடுகிறார்களாம்..

இதனால் அச்சமடைந்த காக்கிகளில் சிலர், மாவட்ட கண்காணிப்பு ஆபீசில் முறையிட்டு உள்ளார்களாம்.. ஆனால் புகார் கடிதமோ கண்காணிப்பின் கைக்கு போய் சேராததால் பாதிக்கப்பட்ட காக்கிகள் டென்ஷனில் உள்ளார்களாம்.. மாறாக, ஆள விடுங்கடா சாமி… என புலம்பும் அளவுக்கு ஓட்டம் பிடிக்க தொடங்கி இருக்கிறார்களாம்.. முத்து ராஜாவுக்கு கண்காணிப்பு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்புதான் உள்ளூர் காக்கிகளிடத்தில் நிலவுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் மாஜி தேசிய செயலாளரின் பேச்சால் புலம்புறாங்களாமே மலராத கட்சியின் நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமி பெயர் கொண்ட நதி மாவட்டத்தை சேர்ந்த மலராத கட்சியின் சர்ச்சை பேச்சு புகழ் மாஜி தேசிய செயலாளரின் சமீபத்திய பேச்சுக்கள் கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை கிளப்பி விடுமோ என்ற பயத்தில் அக்கட்சி நிர்வாகிகள் இருக்காங்களாம்.. ஏற்கனவே இவரது நடவடிக்கை பிடிக்காமல், மலராத கட்சியில் பலர் விலகிச் சென்றுவிட்டாங்க..

தன்னைத் தவிர வேறு யாரையும் மாவட்ட மக்களுக்கு தெரியாத வகையில் கட்சியை சுருக்கிவிட்டாருன்னு இவர் மீது புகார் கூறி வர்றாங்க.. மேலும், மாவட்டத்தில் இவர் சிபாரிசு செய்த யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லையாம்.. இதனால் இவரை நம்பி பலனில்லை. ஒரு வழியாக சேலத்துக்காரரை மடக்கி இலைக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாச்சு… இனி வரும் காலங்களில் நமக்கு ஏதோ தேர்தல் வேலை கிடைக்கும். கையில் கரன்சி புரளுமென மலராத கட்சியினர் மகிழ்ச்சியாக இருந்தாங்களாம்..

ஆனால், மாஜி தேசிய செயலாளரோ, தங்கள் கட்சி தான் கூட்டணியில் முக்கிய முடிவுகளை எடுக்கும். தொகுதி பிரிப்பதும் நாங்கதான்.. எங்கள மீறி இலைக்கட்சி டாமினேட் பண்ண முடியாது என தனது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, மைக் பிடித்தாலோ, பார்த்தாலோ மிரட்ட தொடங்கி விடுகிறாராம்.. இப்படியே இவர் பேசிக்கிட்டிருந்தா விளங்கிரும்.. கூட்டணிக்கு வேட்டு வைக்க வேற ஆள் வேணாம்.. இவரே போதும் போல என கட்சி நிர்வாகிகள் புலம்ப தொடங்கி விட்டனராம்.. புதிய மாநில தலைமையோ இவருக்கு எப்படி வாய்ப்பூட்டு போடுவது என்பதில்தான் குழப்பத்தில் இருக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post கூட்டணிக்கு வேட்டு வைக்க மாஜி தேசிய செயலாளரே போதும் என புலம்பும் மலராத கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article