கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனைவியை இழந்த அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து நகை, பண மோசடியில் ஈடுபட்ட பிரபல கல்யாண ராணியை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி செசிலியா (24). இவர், ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளர் வனத்தையன் என்பவரின் மகள். இந்நிலையில், வனத்தையனின் மகள் செசிலியா கடந்த 2 நாட்களுக்கு முன், மணிமங்கலம் காவல் நிலையத்தில் கோவையை சேர்ந்த மடோனா (47) என்ற பெண்மீது புகார் அளித்தார். அப்புகாரில், கடந்த 1993ம் ஆண்டு ஊட்டி, மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி மகேந்திரன் என்பவரை மடோனா திருமணம் செய்துள்ளார்.
அவர் இறந்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த, மனைவியை இழந்து தனியாக வசித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கனகராஜ் என்பவரை மடோனா 2வதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மனைவியை இழந்து தனியே வசித்த ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளரும் எனது தந்தையுமான வனத்தையனை போலி ஆவணங்கள் மூலம் தேவாலய பாதிரியாரை ஏமாற்றி, குழந்தை இயேசு ஆலயத்தில் 3வதாக மடோனா திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், வனத்தையனின் சொத்துகளை அபகரிக்கும் வகையில், அவரது குடும்பத்தினரை அடியாட்களுடன் வந்து மிரட்டி, வீட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்தையனின் மகள் செலிலியா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை இழந்து தனியே வசிக்கும் அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்து மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பிரபல கல்யாண ராணி மடோனாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட மடோனா மீது, ஏற்கெனவே அரசு கருவூலத்தை ஏமாற்றி பணம் பெற்றதாக உதகை போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கூடுவாஞ்சேரி அருகே மனைவியை இழந்த அரசு ஊழியர்களை திருமணம் செய்து மோசடி: பிரபல கல்யாண ராணி கைது appeared first on Dinakaran.