சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் முழு அதிகாரம் எனக்குத் தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமூக நீதிக்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் பாமகவில் தலைவர் பதவிக்கான நாற்காலியை பிடிக்க தந்தை, மகனிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; ராமதாஸாக இருந்து எது கூறியிருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு செய்திருப்பேன். ராமதாஸுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.
12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். 3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக பாமக நிறுவனர் ராமதாஸை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். ராமதாஸ் கூறியதால்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன். என்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லியதால்தான் பாஜகவுடன் 2024ல் கூட்டணி பற்றி பேசினேன். கடந்த 5 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை.
சமூக ஊடகங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். பா.ம.க. சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கின்ற சட்டவிதி கிடையாது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். பாமகவில் பயிர் எது? களை எது? என்பது இப்போதுதான் தெரிகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது அத்தனையும் பொய். 2 மாதங்களாக பாமகவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டன.
நான் பேசாமல் இருப்பதால் ராமதாஸ் கூறும் கருத்துகள் மட்டுமே மேலோங்குவது போல உள்ளது. தெளிவுக்காக காத்திருந்தேன்; உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும் விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்? என்றைக்குமே ராமதாஸை பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பாமக நிறுவனர் ராமதாஸை திடீரென சந்தித்து பேசுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post குழந்தை போல் மாறிவிட்டார் ராமதாஸ்; பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.