
கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம், ஆடி மாதம். இந்த மாதத்தில் சுக்ரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாளை 'ஆடிப்பூரம்' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் 28-7-2025 (திங்கட்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் திருக்கோவில்கள்தோறும் உற்சவங்கள் நடைபெறும். இந்த ஆடிப்பூர நாளில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால், புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர்களுக்கு புத்திரப்பேறு ஏற்படும் என்பது ஐதீகம்.
சில ஆலயங்களில் முளைக்கட்டிய தானியத்தை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வர். ஆடிப்பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே பச்சைப் பயிரைத் தண்ணீரில் நனைய வைப்பர். அது ஆடிப் பூரத்தன்று நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டு, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அதைச் சாப்பிடும் பெண்களுக்கு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதேபோல் திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.