குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சொந்த நாட்டு செயற்கைகோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன. தற்போது, ராக்கெட்களை ஏவுவதற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் மட்டுமே உள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி கண்டறியப்பட்டது.