குற்றவாளியை பிடிக்க சென்றபோது ஏட்டு சுருண்டு விழுந்து பலி

3 hours ago 3

விக்கிரவாண்டி: குற்றவாளியை விரட்டிச்சென்றபோது தலைமை காவலர் நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலைய தலைமை காவலர் சீனிவாசன் (40). இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையார்பட்டு கிராமத்தில் 3 நபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று பேசிக் இருந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் சீனிவாசன் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அதில் ஒரு நபர் மட்டும் தப்பி ஓடினார். தொடர்ந்து மற்ற இருவரும் தப்ப முயன்ற போது ஏட்டு சீனிவாசன் மற்றும் அவருடன் ரோந்துபணியில் இருந்த முதல் நிலைக்காவலர் மஞ்சுநாதன் (35) என்பவரும் இருவரையும் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவரிடம் கஞ்சா பாக்கெட் இருந்தது. பின்னர் இரண்டு பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரை பிடிக்க சென்றனர். அப்பகுதியில் தேடிப்பார்த்தபோது ஆவுடையார்பட்டு கிராமம் ஏரிக்கரையில் நின்றிருந்த அந்த நபரை தலைமை காவலர் சீனிவாசன் மற்றும் முதல்நிலை காவலர் மஞ்சுநாதன் ஆகிய இருவரும் விரட்டி சென்றனர்.

அப்பொழுது தலைமை காவலர் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முதல்நிலை காவலர் மஞ்சு நாதன் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

The post குற்றவாளியை பிடிக்க சென்றபோது ஏட்டு சுருண்டு விழுந்து பலி appeared first on Dinakaran.

Read Entire Article