சென்னை: “2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் செய்த அனைத்து சார்-களுக்கும் சட்டத்தின்முன் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று எச்சரிக்கிறேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதே, என்ன இன்னும் நிலைய வித்துவானை காணவில்லை என்று நினைப்பதற்குள் தனது அறிக்கை வாயிலாக மீண்டும் ஆஜராகிவிட்டார் அமைச்சர் ரகுபதி சார். ஸ்டாலின் மாடல் அரசு விசாரித்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அப்படி நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி நடத்திய விசாரணைக்குக் கூட கிரெடிட் எடுக்கும் அளவுக்கு ஸ்டிக்கர் வெறி திமுகவுக்கு முற்றிப் போயுள்ளது.