
பாட்னா,
பீகார் மாநிலம் நலந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் இன்று குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது.
மோடி அரசு ஒருபோதும் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது. ஏனெனில் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்.
அரசியலமைப்பை காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் சாதிவாரி கணக்கெடுப்புக்காக நான் போராடுகிறேன். எதிர்காலத்தில் நாங்கள் எந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்தாலும், இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும்.
பிரதமர் மோடி, 'நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்' என்று கூறுகிறார். அதே சமயம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் சாதி இல்லை என்று கூறுகிறார்கள். நாட்டில் சாதி இல்லை என்றால் நரேந்திர மோடி எப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக ஆனார்?
இந்தியா, பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததும் நரேந்திர மோடி உடனடியாக சரணடைந்துவிட்டார். இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்தியது குறித்து டிரம்ப் சுமார் 11 முறையாவது பகிரங்கமாக பேசியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். இது குறித்து அவருக்கு எதுவும் சொல்ல மாட்டார் என்பது எனக்கு தெரியும்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.