*வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 850 எக்டேர் வரை குறுவை சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுக்கூர் வட்டாரத்தில் 1,540 எக்டேர் குறுவை சாகுபடி பரப்பு இலக்காக வழங்கப்பட்டுள்ளதில் மீதம் 750 எக்டேர் நடப்பு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
நெல் சாகுபடி காலங்களில் குறுவைப் பருவத்திலேயே வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளமை ஏற்படுத்திட தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 21 டன் சான்று பெற்ற நெல் விதைகளுக்கு மானியம், திரவ உயிர் உரங்களுக்கு 87 ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியம், ஹெக்டருக்கு 12.5 கிலோ வீதம் நெல் நுண்ணூட்டத்திற்கு 50 சத மானியம் மற்றும் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் வீதம் 450 ஏக்கருக்கு ரூ. 18 லட்சம் மானியம் மதுக்கூர் வட்டார குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அடங்கல், மிஷின் நடவு மேற்கொண்டதற்கான பட்டியல், கணினி சிட்டா, ஆதார் மற்றும் பாஸ்புக், லேட்லாங்குடன் கூடிய புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு 400 ஏக்கரும், எள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க 25 ஏக்கரில் சிறப்பு திட்டம் மதுக்கூர் வட்டாரத்திற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயறு மற்றும் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற விதைகள், சூடோமோனஸ், திரவ உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு விவசாயிகளுக்கு 450 ஏக்கர் இலக்கு நிர்ணயம் appeared first on Dinakaran.