குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் நடந்த விழாவை முடித்து கொள்ள சொன்னதால் போலீசாரை கண்டித்து மக்கள் போராட்டம்

2 weeks ago 2

 

புவனகிரி, ஜன. 18: புவனகிரியை அடுத்துள்ளது கே.ஆலம்பாடி கிராமம். இக்கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காணும் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கிராம மக்கள் சார்பில் மேடை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரவு தாமதமானது. இதையறிந்த மருதூர் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்றனர். மேலும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் ஆலம்பாடி கிராமத்திற்கு சென்று குறிப்பிட்ட நேரத்தை கடந்து விழா நடத்துவது ஏன் எனக்கூறி விழாவை முடித்துக் கொள்ளச் சொன்னதாக கூறப்படுகிறது.

அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரை கிராம மக்கள் சிலர் ஒருமையில் பேசி திட்டியதாகவும், இதையடுத்து போலீசார் கிராம மக்களை லத்தியால் தாக்கி விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் எழுந்தது. இதை தொடர்ந்து கிராம மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராமத்திலேயே அம்பேத்கர் படத்தின் முன் தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து நள்ளிரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் மற்றும் பல்வேறு காவல் நிலைய அதிகாரிகள் ஆலம்பாடி கிராமத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிஎஸ்பியிடம் கிராம மக்கள், போலீசார் திடீரென வந்து தங்களை தாக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் நடந்த விழாவை முடித்து கொள்ள சொன்னதால் போலீசாரை கண்டித்து மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article