திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் முதல்படை வீடாக திகழ்கிறது. இக்கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்முதேவன், மணிச்செல்வம், ராமையா ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த பிப்.10ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் விமானம், கோயிலின் உபகோயில்கான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர் கோயில், காசிவிசுவநாதர் கோயில், குருநாதர் சுவாமி கோயில், பாம்பாலம்மன், கோயில் ஆகிய இடங்களில் பாலாலயம் நடைபெற்றது.
பிப்.25ம் தேதி ராஜகோபுரம் திருப்பணிக்காக முகூர்த்தகால் நடும்விழா நடந்தது. மார்ச் 5ம் தேதி முதல் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி நாளை மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை முதல் யாகசாலை பூஜை தொடங்கி, வரும் 13ம் தேதி வரை எட்டு காலமாக நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை குண்டங்கள், வேதிகைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. பின்னர் ஜூலை 14ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான யாகாசாலைகள் தயாராக உள்ளன. கும்பாபிஷேக பணிகளில் அறங்காவலர் குழு, கோயில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருப்பரங்குன்றம் கோயில்: யாகசாலை பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.