கும்பகோணம், டிச.9: கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் இயங்கிவரும் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் சார்பில் உலக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘மாணவர்கள் நலனில் காவல்துறை’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக நலன் கருதி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் பங்கேற்று மாணவ, மாணவிகளிடையே பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு ஆகியவை குறித்தும், அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்தும், அதிலிருந்து மீள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதையடுத்து, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கும்பகோணத்தில் மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.